Tuesday, March 26, 2013

விளையாட்டும்... அரசியலும்...


"தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது.

அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது.

1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது.

1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தது.

அதற்கு பழிக்கு பழியாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் யூனியன் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தது.

1988 ஆம் சியோலில் நடந்த ஒலிம்பிக்கை தென்கொரியாவோடு சேர்ந்து நடத்த அனுமதிக்காததை கண்டித்து வடகொரியா புறக்கணித்தது. அத்தோடு சேர்ந்து கியூபாவும் எதியோபியாவும் புறக்கணித்தது. 

உலக நாடுகளே இப்படி முடிவெடுக்கும் பொழுது ஆசிய தடகள போட்டியில் இலங்கை பங்கேற்ப்பதற்காக நிறுத்திய பொழுது விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்பவர்களையும், கிரிக்கெட்டில் இலங்கையையும் அதன் வீரர்களையும் புறக்கணிக்ககோரும் பொழுது அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று வியாக்கியானம் பேசுபவர்களையும் என்ன செய்யலாம்..????

#வேறென்ன வெளு வெளுனு வெளுக்கணும்...

Monday, March 25, 2013

24ம் திராவிட புலிகேசி...


"வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்." - நான் பெரிதும் நேசித்தநேசிக்கும் இந்த வரிக்கு சொந்தகாரர் பேராசிரியர் சுபவீஇந்த எழுத்தை போல சுபவீயையும் நான் எனது பள்ளிகல்லூரி காலங்களில் நேசித்ததற்கு நிறைய காரணங்கள் இருந்தது. மதுரையில் பள்ளி விடுமுறைகளில் பங்குபெறும் ஈழ ஆதரவு தமிழ்த்தேசிய கூட்டங்களிலும்மற்றவர்கள் அவரை பற்றி சொல்ல கேட்டும் அறிந்திருந்தேன். தனக்கு எதிரான கொள்கையுடைய அரசியல் பிரமுகர் வீட்டை தேடிகொண்டிருந்த ஒருவரை சிரமம் பார்க்காது அவர் வண்டியில் அப்பிரமுகர் வீட்டிற்கே கொண்டு வந்து விட்ட சம்பவத்தை அப்பிரமுகரே பெருமையுடன் சொல்ல கேட்டிருக்கிறேன். அப்பொழுதிலிருந்து சுபவீ என் ஆதர்சம். சுபவீ அமெரிக்கா வருகிறார் என்று கேள்விப்பட்டு பாஸ்டனில் இருந்து ப்ளோரிடா மாகாணத்திற்கு 2190 கிலோமீட்டர் தனியாக ஒரு பகல் ஒரு இரவு வண்டி ஒட்டி சென்றேன். அவ்வளவு பிடிக்கும். பெரும்பாலும் பேராசிரியர்கள் என்ற பொறுப்பு மிகுந்த சமூகம் மாணவர்களிடமும்இளைஞர்களிடமும் அந்நியப்பட்டு நின்று கொண்டிருந்த காலகட்டத்தில்சுபவீயின் எழுத்துகளை படித்து தமிழர் அரசியலையும்தமிழ்தேசிய அரசியலின் அவசியத்தையும் அறிந்துகொண்ட எனக்கு அவரது மீசையும்உரத்த குரலில் நேர்த்தியான தமிழ்மொழியும்ஒரு பேராசிரியர் என்ற பிம்பத்தை உடைத்து ஒரு போராளி என்று அடையாளம் காட்டியது. தமிழகத்தில் ராஜீவ் மரணத்திற்குபின் தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்துபுலிகளின் சமரசமற்ற அரசியலை அயராது பரப்புரை செய்த வெகு சிலரில் சுபவீயின் பங்கு அலாதியானது என்பதை மறுப்பதிற்கில்லை. அதுபோலஅந்த காலகட்டத்தில்இந்திய அரசின் தமிழர் விரோத துரோக முகத்தைஇளைய மாணவ சமூகத்திடம் கொண்டு சேர்த்த பெரும்பணி அவருடையது. அன்று வீரம்செறிந்த தமிழ்தேசிய இன விடுதலை உணர்வைஎன் போன்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஊட்டிய போராளி சுபவீயும்அவரது உரைவீச்சின் கூர் ஏறி போராயுதமான மீசையும்இன்று புலிக்கேசியின் மீசையையும்வைகைப்புயல் வடிவேலுவையும் நியாபகப்படுத்துவது வேதனையளிக்கிறது. 
ஒன்றும் தெரியாதவரை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் எல்லாம் தெரிந்துகொண்டு எல்லாம் அறிந்துகொண்டு சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து ஒரு தவறான நபரை தாங்கிப்பிடிக்கும் மனிதர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை'. அப்படி ஏற்றுக்கொள்ளவே முடியாத நபராக என்னுள் மாறியிருக்கிறார் சுபவீ. "பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்" என்ற தலைப்புகளில் 2002யில் கூட்டங்கள் பேசி பரப்புரை செய்துவந்த சுபவீயை பொடாவிற்கும் பொடாவிற்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். பொடாவிற்கு முன் தமிழர் மனங்களில் பேருருவமாய் இருந்த சுபவீபொடாவிற்கு பின் கருணாவின் மறுவுருவமாய் மாறிதமிழர் அரசியலுக்கும் தமிழ் தேசிய முன்னெடுப்புகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுதான் போகுமிடமெல்லாம் திமுக தலைமைக்கு முட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்துவது வருத்தமளிக்கிறது. முன்னர் மேடையில் அவரின் உடல் மொழி மற்றும் கருத்துருவாக்க சொல்லாடல்கள் அவரை தேர்ந்த அறிவியலாளராய் என்போன்ற தமிழ் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டியது. திமுக பாரதியஜனதாவோடு கூட்டணி வைத்த பொழுது அண்ணன் அறிவுமதி அவர்களின் கவிதை வரியான ‘சூரியனே உனக்கு சூடு இல்லையா’ என்பதை சுட்டிக்காட்டி மேடையில் கிழி கிழி என்று  கிழிப்பார் ஆனால் இப்பொழுது கருணாநிதியையும் ஸ்டாலினையும் புகழ்ந்து தலைவர், தலைவர் அவர் என்று துதிபாடுவதென்பது, "அம்மையார் ஜெயலலிதாவை அதிமுகவில் இருக்கும் பொழுது அம்மா, புரட்சித்தலைவி, இதய தெய்வம் இன்று கூறிவிட்டு இன்று கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் தமிழ் இன தலைவர்" என்று புகழ் பாடும் கடா மீசை செல்வகணபதியை தான் நியாபகப்படுத்துகிறது.


போர் நடைபெற்ற பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி தன்னால் இயன்றதை செய்தார் இயன்றதை செய்தார் என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல எல்லா இடத்திலும் மறக்காமல் சொல்கிறார். அவர் சொல்கிறபடியே கருணாநிதியால் இயன்றதை செய்தும் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்துவிட்டனர். முதல்வராக இருக்கும் பொழுதே அவ்வளவு தான் செய்ய முடியும் என்றால் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் இருக்கும் இப்பொழுது டெசோ என்று ஆரம்பித்து கருணாநிதியால் தான் ஈழம் அடைய முடியும் என்கிறார். தனி ஈழமே தீர்வு என்று சொல்லாத டெசோவினால் ஈழம் அடையலாம் என்று சுபவீ சொல்வதற்கு பின்னால் தனது அன்றாட பிழைப்புவாததிற்காய் கருணாநிதியின் அரசியலை நியாயப்படுத்தும் கீழான எண்ணத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்வல்லாதிக்கங்கள் சேர்ந்து நடத்திய போரை ஒரு மாநில முதல்வரால் எப்படி தடுத்திருக்க முடியும் என்று சப்பைக்கட்டு கட்டும் சுபவீஅந்த வல்லாதிக்கத்தில் இந்திய அரசும் அடங்கும் என்று சொல்லாமல் மறைப்பதற்கு காரணம் இந்திய அரசு என்று சொன்னால் அது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தான் என்ற குட்டு வெளிப்பட்டு, இறுதி போரில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் தான் தூக்கி சுமக்கும் திமுகவும் அதன் தலீவரும் பங்குதாரர்கள் என்று அம்பலபட்டுவிடும் என்பதால் தான். இப்படி எப்பாடுபட்டாவது திமுகவை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி மட்டும் உண்மையை மறைக்கும் சுபவீஇதனூடாக திமுகவை மட்டுமன்றி இன எதிரி காங்கிரசையும் காப்பாற்ற துணைபோவது காலத்தின் கொடுமை.
ஈழ பிரச்சனையை விட கருணாநிதியை வீழ்த்துவது தான் உங்கள் குறிக்கோள் என்று மற்றவர்களை சொல்லிக்கொண்டே ஈழ விடியலை விட திமுக ஆட்சிக்கு வருவதை குறிக்கோளாக கொண்டு கேவலமாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. திமுக செயற்குழுவில் பங்கேற்று திராவிட அரசியல் பாடம் எடுப்பது அதற்கு உதாரணம். அடுத்தவர்களை கருணாநிதி எதிர்ப்பாளர் என்று உருவகப்படுத்த ஜெயலலிதா அதரவு முத்திரை குத்த கருணாநிதி அடிமையான சுபவீக்கு அருகதை உள்ளதா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 1990யில் சென்னையில் தமிழர் தன்னுரிமை மாநாட்டில் கலந்துகொண்டதற்காக அவரை கைது செய்த கருணாநிதியை அவர் மறக்கலாம் ஆனால் ஈழ பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற முனைப்போடு அங்கு நடக்கும் அவலங்களை குறுவெட்டாக மாற்றி வீடு வீடுக்கு கொண்டு சென்ற தமிழ்ப்பிள்ளைகளை தேடி தேடி கருணாநிதி அரசு கைது செய்ததை எப்படி மறக்க முடியும்?.. பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியது தனக்கு தெரியாது என்று கருணாநிதி சொன்னதை நம்புபவன் ஒன்று மனநிலை சரி இல்லாதவனாக இருக்கவேண்டும் இல்லை கருணாநிதியிடம் வாங்கி தின்னும் உலகமகா திருடனாக இருக்கவேண்டும். இன்றளவும் கருணாநிதிக்கு தெரியாமல் தான் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பினார்கள் என்று சொல்லும் சுபவீ யார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

கடைசி நேரத்தில் சமரசதிட்டம் தயாரானது அதை ஜகத்கஸ்பர் என்னிடம் கூறினார்நான் நடேசனிடம் கூறினேன். அவர் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார் ஆனால் தொடர்புகொள்ளவில்லை காரணம் வைகோவும் நெடுமாறனும் அதை நம்பவேண்டாம் என்று சொல்லி கெடுத்துவிட்டனர் என்று சொல்லும் சுபவீ ஜகத்கஸ்பரிடம் யார் அந்த சமரசதிட்டதை சொன்னதுஅவருக்கு பின்னால் யார் இருந்தது என்று சொல்ல தைரியம் உள்ளவராசரி நடேசன் மீண்டும் தொடர்பு கொள்ளாத பொழுது எப்படி அண்ணன் வைகோவும் அய்யா நெடுமாறனும் அதை தடுத்தார்கள் என்று இவருக்கு தெரிந்ததுஅண்ணன் வைகோஅய்யா நெடுமாறன் பேச்சை எல்லாம் கேட்டு அரசியல் செய்தவர்களா புலிகள்இதை விட அவர்களை சிறுமைபடுத்த முடியுமாசரி அவர் சொல்கிறபடியே இந்தியாவில் இருக்கும் ஒரு பாதிரி ஜகத்கஸ்பரே சமரசம் செய்து போரை நிறுத்தும் வேலை செய்ய முடியும் என்றால் முதல்வராய் இருந்த கருணாநிதியால் செய்திருக்க முடியாதாகருணாநிதிக்கு இந்த சமரச திட்டம் தெரியாதாஅவரே வெளிப்படையாக சமாதானத்திற்கு இறங்கி இருக்கலாமேஏன் கருணாநிதி அமைதி காத்தார் என்று சுபவீ சொல்ல துணிவிருக்கிறதா? 

உலகை சுரண்டி கொழுக்கும் எல்லா கார்பரேட் நிறுவனங்களும் தங்கள் கோர முகத்தை மறைக்க ஒரு துணை அமைப்பு NGO போல் வைத்துக்கொள்வார்கள். தங்கள் நிறுவனம் சார்பாக முன்னெடுக்கும் நற்செயல்களை விளம்பரப்படுத்தி தங்கள் நிறுவனத்தின் மேல் நன்மதிப்பை பெருக்க முயல்வார்கள். பல சமூக பணியார்களை அதில் ஊதியத்துடன் நியமித்து தங்கள் நிறுவனதிற்கான சேத கட்டுப்பாட்டு அமைப்பாக அதை கட்டமைதிருப்பார்கள். பில்கேட்ஸ் தொடங்கி ரிலையன்ஸ் வரை தாங்கள் கறைபடியாதவர்கள் என காட்ட இதை பின்பற்றுகிறார்கள் அந்த வரிசையில் சில காலத்திற்கு முன் கார்பரேட் நிறுவனமாக மாறிப்போன திமுக ஈழ பிரச்சனையில் தங்கள் கட்சிக்கு வந்த சேதத்தை கட்டுப்படுத்த சுபவீஎன்பவரை நியமித்திருக்கிறது என்றே நாம் எண்ண வேண்டியிருக்கிறது. அழகரி கூட புறக்கணிக்கும் அக்கட்சியின்  செயற்குழுவில் பங்கேற்கிறார்கட்சியின் அறிக்கையில் பட்டியலிடும் பேச்சாளர்களுள் அவர் பெயரும் வருகிறது ஆனால் திமுக வேறு தான் வேறு என்றும் வெளியே சொல்லிக் கொள்கிறார் ஆக சுபவீயும் அவர் அமைப்பான திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் கார்பரேட் திமுகவிற்கு ஒருவகையான ஊதியதுடனான நியமனமும் துணை அமைப்புமாகும்.


ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மாணவர்களின் கோரிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது நமக்கு இருப்பது அமெரிக்கா தீர்மானம் மட்டும் தான் அதை எதிர்ப்பதா?  டெசோ அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்கும். முதலில் போய் இணையத்தில் தீர்மானத்தை படியுங்கள் என்றார் எகத்தாளமாக. ஒரு நேர்க்காணலில் டெல்லியில் நடக்கும் டெசோ கருத்தரங்கத்திற்கு கல்லம் மாக்ரே கலந்துகொள்கிறார் அது பொறுக்காமல் இவர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள் என்றார் ஆனால் அந்த கருத்தரங்கில் காங்கிரசை தவிர வெளியில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை அதே போல் கருணாநிதி நாங்கள் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கபோகிறோம் என்று சொல்லவில்லை என்றும் பல்டி அடித்துவிட்டார். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்ற நிலைப்பாடு மகிழ்ச்சி தான் ஆனால் திமுகவை காப்பாற்ற எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று இறங்கி இருக்கும் சுபவீயை நினைத்தால் தான் என் போன்ற அவரை நேசித்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு வேதனையும் வருத்தமும். லயோலா கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு அவர் வந்த பொழுது எழுந்த எதிர்ப்பு அவர் நினைப்பது படி மாற்று கட்சியினரின் தூண்டுததில் இல்லை முப்பது வருடமாக பல சிறை சென்று போராடி கடைசியில் கருணாநிதியிடம் சரணடைந்த முன்னாள் உணர்வாளரின் துரோகத்திற்கு எதிரான தன்னெழுச்சியான எதிர்ப்பு என்பதை சுபவீ புரிந்துகொள்ள வேண்டும்.    

கடைசியாக...2009க்கு முன்னர் எங்கே இருந்தீர்கள் என்று எங்களை நோக்கி கேள்வி கேட்கும் பேராசிரியரே, 2009க்கு முன் உங்கள் பின்னால் இருந்தோம் அதனால் உங்களுக்கு தெரியவில்லை இப்பொழுது எதிர்த்து நிற்பதால் உங்கள் கண்களுக்கு தெரிகிறோம். டெசோ கூட்டம்ஸ்டாலினோடு ஊர் ஊருக்கு செயற்குழு கூட்டம்ஏதேனும் ஒரு ஊரில் மொழிப்போர் நாள் கூட்டம் என்று வரும்படியோடு கூட்டங்களுக்கு செல்லும் பிழைப்பு எங்களால் தான் வந்திருக்கிறது என்ற நன்றி உங்கள் மனதில் ஓரத்தில் இருந்தால் இனி எங்கே இருந்தீர்கள் என்று கேட்காதீர்கள்.

குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு என்பார்கள் கருணாநிதி என்னும் தமிழ்குலம் அறுத்த கோடாலிக்கு காம்பு சுபவீ..

Thursday, September 17, 2009

'கண்டேன் பிரபாகரனை!'- சீமான் விவரிக்கும் சிலிர்ப்பான சந்திப்பு


சீமான்-முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர் படும் துயரம் பற்றிப் பேசும்போது கூடியிருப்போரைக் கலங்கி அழ வைக்கிறார். 'பிரபாகரன் விரைவில் வருவார்!' என்று அடித்துச் சொல்லி மிரளவைக்கிறார். என்ன பேசினாலும், எது கேட்டாலும் படபட பட்டாசு பொறிதான். மதுரை, தூத்துக்குடியில் முழங்கிவிட்டு
திருப்பூர் ஆரவாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். சீமானின் 'நாம் தமிழர் இயக்கம்' அடுத்த மே மாதம் மாநில மாநாட்டை அரங்கேற்றுவதற்கான முனைப்பில் இருக்கிறது.

ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் அறிய சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சீமானைச் சந்தித்தேன்.

''கொடூரமாகப் பல கொலைகள் நடந்திருப்பதற்கான புகைப்பட, சலனப்பட ஆதாரங்கள் இப்போது வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. இது குறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்கிறாரே முதல்வர்?''

''தமிழ் இளைஞனை கண்ணைக் கட்டி, நிர்வாணப் படுத்தி சுட்டுக் கொன்ற கொடூரத்தை இந்திய அரசாங்கம் இதுவரை கண்டிக்கவில்லை. ஏன் என்பதற்கான உண்மையான அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்.''

''தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளை வாங்கிக் கொள்ளலாம், தனி நாடு கேட்பதால்தான் இலங்கை அரசு பயப்படுகிறது என்கிறார்களே?''

''இதெல்லாம் வரலாறு அறியாத அம்மண்ணின் துயர் புரியாதவர்களின் பேச்சு. தமிழீழ மக்களுக்கு அந்தத் தேசத்தில் பங்கு பாத்தியதை இருக்கிறதுதானே? அப்படியென்றால், அம்மக்கள் கொடுமைப்பட்டது ஏன்? சிங்களவன் வைத்திருக்கும் துப்பாக்கி தமிழனை மட்டும் சுட்டது ஏன்? அவன் பேசிய தமிழ் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழ்ப் பெண்ணை விரட்டி விரட்டிச் சூறையாடியது ஏன்? எல்லாம் இனவாத நோக்கம்தான். இந்த வெறுப்பும் வக்கிரமும் ஆரம்பம்தொட்டே இருந்ததால்தான் தமிழனால் அவர்களுடன் ஐக்கியமாகி வாழ முடியவில்லை. தனி நாடு கேட்டான்.

தமிழனாக இருந்துகொண்டு இதைச் சொல்லவே எனக்கு நாக்கு கூசுகிறது. ஆனாலும், அதுதான் உண்மை. தற்காலத் தமிழன் இனத்தைவிட பணத்தை மதிப்பவன். அதைக் கொடுத்து வாக்குகள் வாங்கிவிடலாம் என்பதால்தான், இந்தத் துரோகம் நடந்தது. ஆனால், கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல சங்கதியாக இன்றைய இளந் தலைமுறை அதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதை ஆக்க சக்தியாக மாற்றும் வேலையைக் கட்டளையாகப் பணித்துதான் தலைவர் பிரபாகரன் என்னை அனுப்பியிருக்கிறார்!''

''பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் என்று முன்பு செய்தி உலவியது... அதுபற்றி நீங்கள் இப்போதாவது பேசலாமே...''

''இந்திய ராணுவ உதவியுடன் சிங்களவன் தொடுத்த தந்திரப் போர் உக்கிரமடைவதற்குச் சில நாட்களுக்கு முன் தலைவர் பிரபாகரனை நான் சந்தித்தேன். முழுக்க முழுக்க நள்ளிரவுப் பயணமாகவே இருந்தது அது. நானும் நடேசன் அண்ணாவும் பின்னால் உட்கார்ந்திருக்க... ஜீப் எங்களை அழைத்துச் சென்றது. திடீரென்று நின்ற வண்டியில்இருந்து அதுவரை ஓட்டி வந்தவர் இறங்கிக்கொண்டார். தொடர்ந்து நடேசன் ஓட்ட ஆரம்பித்தார். சில கிலோ மீட்டர்கள் போனதும் ஜீப்பின் விளக்கு கள் அணைக்கப்பட்டன. இருட்டுக்குள் ஜீப் தனக்கு மட்டுமே தெரிந்த திசையில் பயணமானது. ஒரு மணி நேரம் கழித்து நான் இறங்கிய இடம் சாதாரண குடிசை. உள்ளே தலைவர் இருக்கிறார் என்று ஆசையுடன் போனேன். இல்லை அவர்!

அரை மணி நேரத்தில் பயங்கர சத்தத்துடன் ஒரு வாகனம் வந்தது. 'புலி உறுமிக்கொண்டு வருகிறது!' என்றார் நடேசன் சிரித்தபடி. நான் தங்கியிருந்த குடிசைக்குப் பின்னால் அழைத்துப் போனார்கள். அங்கு இன்னொரு குடிசை இருந்தது. வாசலில் நின்றிருந்தார் என் தலைவர் பிரபாகரன். பார்த்ததும் உருகிப் போனேன். பாய்ந்து சென்று கட்டி அணைத்தேன். வணக்கம் வைத்து, சின்னச் சிரிப்புடன் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே பொட்டு அம்மான், தமிழேந்தி இருவரும் இருந்தார்கள். வெகுநேரம் வரையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரேதான் நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது. பிரபாகரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக, சுமார் ஒரு வார காலம் அங்குள்ள போராளிகள் மத்தியில் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு காசிக் கயிறு கட்டியிருந்தாள் ஒரு பெண் போராளி. 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'சின்ன வயசுல இருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏன்னு தெரியலை. தமிழர்களுக்குத் துரோகம் செய்த துரையப்பாவைச் சுட, முதன்முதலா ஆயுதம் தூக்கிப் போனப்ப அவர் கிருஷ்ணன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தாரு. குறிபார்க்கும்போது கிருஷ்ணர் முகம்தான் தெரிஞ்சது. 'அநியாயத்தை அழிக்க யுகம்தோறும் அவதாரமா வருவேன்' அப்படின்னு நீதானே சொன்னே என்று நினைத்துக்கொண்டே சுட்டேன். துரையப்பா செத்துட்டாருன்னு பிறகு தகவல் வந்து சேர்ந்தபோது, 'கிருஷ்ணர் என் பக்கம்'னு நினைத்தேன்.
எங்க போராட்டத்துக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது பணம் கொடுத்தார். அதை எப்படியாவது பாதுகாப்பா இங்க கொண்டு வரணும்னு கவலைப்பட்டபோது, எனக்குத் திரும்பவும் கடவுள் நினைவு வந்துச்சு. பழநிக்குப் போய் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டேன். கிட்டு இறந்ததற்குப் பிறகுதான் எந்தக் கணத்திலும் கடவுள் எண்ணம் தோன்றாத முழு நாத்திகனா மாறிட்டேன்' என்றார்.

தமிழோடு பல வார்த்தைகளை ஆங்கிலத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்துவது குறித்து நான் போராளிகளிடம் சற்றே கேலியாகப் பேசியிருந்தேன். அதைப் பற்றியும் அடுத்து விளக்கினார் பிரபாகரன். 'தமிங்கிலீஷ்ல பேசுவதாகச் சொன்னீங்களாமே. அது உங்க நாட்டுல இருந்து இங்க இறக்குமதி ஆனதுதான். ரொம்ப நாள் வரை அப்படி இங்கே இல்லை. சமாதான காலத்துல உங்க நாட்டு டி.வி-யை இங்கே திறந்துவிட்டதன் விளைவு அது. தமிழீழம் மலரும்போது தமிழ் தமிழாக மட்டுமே இருக்கும்!' என்றார்.

அடுத்து பேச்சு, திரைப்படங்கள் குறித்துத் திரும்பியது. அடுத்து 'கோபம்'னு ஒரு படம் செய்யப் போவதாகச் சொன்னேன். 'அது சம்ஸ்கிருத வார்த்தை. சினம் அல்லது சீற்றம்னு பேர் வைங்களேன்' என்றார் தமிழேந்தி. உடனே தலைவர், ' 'கோபம்'னு சொல்ற வார்த்தைக்கு இருக்கிற உணர்ச்சி அதுல இல்லை. அதனால 'கோபம்'னே இருக்கட்டும்!' என்றார். மேலும், 'தம்பி' மாதிரியான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள், 'வாழ்த்துகள்' மாதிரி தேவையில்லை என்பது அவரது எண்ணம். 'பூக்கள், பறவைகள் என்று மென்மையான விஷயங்கள் எதற்கு நமக்கு? படத்துலயும் அடிக்கணும்... நிஜத்துலயும் அடிக்கணும். அதுதான் அடிமை விலங்கை உடைக்கும்' என்றார். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்தார். நம்ம போராட்டத்தை முழுமையாகப் புரிஞ்சுக்கிட்டு ஆதரிக்கிற நடிகர் சத்யராஜ்னு சொன்னேன். சந்தோஷப்பட்டார். விஜய் பற்றிப் பேசிட்டு இருந்தப்ப, 'யாழ்ப்பாணத்துக்காரரின் பெண்ணைத்தானே அவர் திருமணம் செய்திருக்கிறார்' என்று நினைவுபடுத்திக்கொண்டார். 'பாலாவும் சேரனும் நம்ம போராட்டத்தின் நியாயத்தை ஆதரிப்பவர்கள்தானே' என்று என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அமீர் பற்றி அதிகம் விசாரித்தார். அவருக்கு 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' மாதிரி ஈழப் போராட்டத்தை ஒரு படமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. எத்தனையோ பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தும், முடியாமல் போனதைச் சொல்லி வருத்தப்பட்டார். 'பாலுமகேந்திராவை மட்டும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருங்க. அவரை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்'னு மெய்சிலிர்த்தார். திடீர்னு என்னை நினைத்தாரோ, 'சிவாஜிக்குப் பிறகு வடிவேலுவைக் கொண்டாடுறீங்க. எனக்கும் வடிவேலுதான் தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான கலைஞன் மாதிரி இருக்கு. நடக்கட்டும்... நடக்கட்டும்!' என்றார்.

சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள்தோல்வி யில் முடிந்தது பற்றி அடுத்து பேசினார். 'வன் முறைக்கு அதை விஞ்சும் வன்முறைதான் பதிலாக இருக்க முடியும். சுமாரான வன்முறையை வைத்து வெற்றி பெற முடியாது. வலிமை உள்ளவன் வெல்வான். எனக்குப் பிறகும் இந்தப் போராட்டம் நடக்கும். என்னுடைய கவலை இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரியவைக்க நீங்கள் உங்களது பேச்சைப் பயன்படுத்த வேண்டும்' என்றார். 'பேசிப் பேசித்தான் காலங்கள் கரைந்து விட்டன. இனிமேல் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்றேன். 'இல்லை தம்பி, பேச்சும் ஒரு படையணிதான். என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் வார்த்தைக்கும் உன் வார்த்தைக்கும் ஒரே அளவு வலிமை உண்டு. அதே போல் சினிமாவும் ஒரு படையணிதான். தமிழனுக்குத் தலைவனாக வருபவன் சாகத் துணிந்தவனாக இருக்கணும். சாகப் பயந்தவன் தரித்திரம். சாகத் துணிந்தவன் சரித்திரம். இந்தா இருக்காரே...' என்று ஒருவரைச் சுட்டிக் காட்டினார் பிரபாகரன். 'இவர்தான் கடாபி. என் பாதுகாவலர். சாதாரணத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர். உங்கள் நாட்டில் இப்படியருத்தர் இருந்தால், அனைத்து உச்ச விருதும் கொடுத்திருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் பயிற்சிதான் காரணம். கடுமையான பயிற்சி... எளிதான சண்டை! இது தான் இங்குள்ள தத்துவம்' என்றார்.
அவரது உடம்பு கனமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதைக் கேட்டேன். 'குண்டாக இருக்கிறேனே தவிர, எனக்கு எந்த நோயும் இல்லை!' என்றார். நன்றாகச் சாப்பிடுகிறார். 'இங்கு நடக்கும் சமையலுக்கும் நான் தான் டைரக்ஷன்' என்றார். ராணுவம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. முக்கியமானவை அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும்போது எல்லாம் அவரது முகம் மலர்கிறது. அவர் அமைப்புக்குச் செய்த உதவி பற்றி எல்லாம் சிலாகித்துச் சொன்னார். அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்தாராம். 'உங்களது நாட்டை எதிர்த்துப் போரிடும்போது எம்.ஜி.ஆர். கொடுத்தார். 'அது தேசத் துரோகமா?' என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. எங்களது நோக்கத்தை மட்டும்தான் பார்த்தார்!' என்று வார்த்தைகளில் அத்தனை நன்றி தொனிக்கப் பேசிக்கொண்டே இருந்தார்.

அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, என்னுடன் இருந்த சேரலாதனிடம் அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. 'ஏன்?' என்று கேட்டேன். அது உங்களுக்கும் தலைவருக்குமான தனிப்பட்ட சந்திப்பு. அது பற்றி எனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றவர், 'இங்கு தலைவர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர். மற்றவரில் யாரும் துரோகியாகலாம். நான் உட்பட!' என்று கூறி நிறுத்தினார். என் இதயம் அதிர்ந்து அடங்கியது. மயூரி என்ற காயம்பட்ட பெண் போராளிகளின் காப்பகத்துக்குச் சென்றேன். 'கண்டேன் பிரபாகரனை' என்று அங்கிருந்த தங்கை யிடம் சொன்னேன். 'யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது. நீங்கள் இந்த இனத்துக்கு உண்மை யாக இருங்கள்' என்றாள் அவள்.

உண்மையாக இருக்கவே போராடி வருகிறேன்.''

''இனியும் காண்பீர்களா பிரபாகரனை?''

''ஆம். காண்பேன்! 20 முறை அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர் மீண்டு வந்திருக்கிறார். அமைதிப்படை கொன்றதாகச் சொன்னார்கள். வந்தார். சுனாமியில் அடித்துப் போய்விட்டார் என்றார்கள். மீண்டும் வந்தார். கால் கருகிப்போய், ஒரு காலை எடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் பொய். அவரது கால் நன்றாகத்தான் இருந்தது. இப்போதும் அவர்களது ஆசைப்படி இறந்திருக்கிறார். பார்க்கலாம். அவரது வருகைக்காக நாங்கள் வழக்கம் போல் காத்திருக்கிறோம்!''

நம்பிக்கையும் உறுதியுமான வார்த்தைகள்!

நன்றி - ஆனந்த விகடன்

www.naamtamilar.org

Monday, March 30, 2009

யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்? - பா.செயப்பிரகாசம்

கருணா,
ராசபக்ஷே,
போராடும் தமிழீழ மக்கள் -
யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்? - .செயப்பிரகாசம்

பொதுச் சிந்தனை, எதிர்ச் சிந்தனை- என இரு வழித்தடம் உண்டு. மனிதகுல வளர்ச்சிக்காக உருவாகி காலம் காலமாய் சலித்து வடிகட்டி, சமுதாய ஆக்கத்துக்காக தொகுத்துத் தந்திருப்பது பொதுச் சிந்தனை. மனித இன மேம்பாட்டின் பொருட்டு முந்தைய சிந்திப்புகளில் எது தேவையில்லையோ அவைகளை ஒதுக்கி, புதிய தடம் போடுவது எதிர்ச் சிந்தனை. எதிர்ச் சிந்தனை எனில், அதற்கு சித்தர்களைப் போல உடைப்பு மட்டுமே பிரதானம். மாற்றுச் சிந்தனை எனில் உடைப்பின் இடத்தில், காரல் மார்க்ஸ் போல், பெரியார் போல் மாற்றை முன் வைப்பது ஆகும். எதிர்வரும் தலைமுறைகளின் ஆக்கம் பற்றியே சிந்திக்கிறவர்களாய் மேதைகள் இருப்பதால், மாற்றுச் சிந்தனை, மாற்றுச் செயல்பாடு அவர்களின் பிரதான முன்வைப்பாகிறது.

ஒவ்வொரு சிந்திப்பையும் சமுதாய ஆக்கத்துக்குத் தந்தாக வேண்டுமென்று முன் வைப்பது ஒரு வகை. ஆனால் சமுதாயத்தின் கவனக்குவிப்பு,தன்னை நோக்கித் திரும்புதல் வேண்டும் என்பதின் காரணமாக எதிர்ச் சிந்தனை பேசுவது ஒரு வகை. எதிர்ச் சிந்தனையை மாற்றுக்கானதாய் வைக்காமல் எதையும் குளறுபடியாக விதைத்து விடுதல் தன்னைப் பற்றிய கவன ஈர்ப்புக்குப் போதுமானது. இவ்வகைப் பயணத்தை ஒரு விபத்தாக, தற்செயலாக அல்ல, திட்டமிட்டு தெளிவாகச் செய்பவராக சிந்தனைத் தளத்தில் அ.மார்க்ஸ் முதலிடத்தில் நிற்கிறார்.
I
2009 மார்ச் `புத்தகம் பேசுது` இதழில் அ.மார்க்ஸின் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய நேர்காணல் வெளியாகியுள்ளது. பெருவாரியான கேள்விகள் ஈழவிடுதலைப் போரின் எதிர்ப்பை மையப்படுத்தி-விடுதலைப் புலிகளை மையப்படுத்தி எழுப்பப்பட்டுள்ளன. கேள்வி எழுப்பியவர், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டிலிருந்து நடத்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்திலிருந்து- அக்கருத்துக்களின் அடித்தளத்தில் செயல்படுகிறவராக இருக்கிறார் என்பதினும், அவ்வாறான கேள்விகளை உருவாக்கச் செய்பவராக அ.மார்க்ஸ் இருக்கிறார் என்பது உண்மை. நேர் காணல், வழக்கமாகப் பல்வேறு தளங்களில் வேர் பிரிந்து செல்லும் ஒன்றாக அமையும். இது அவ்வாறு அமையவில்லை. அப்படி அமைந்தாலும், எதற்கும் இந்தா பிடி என்று திருநீறு மந்தரித்துக் கொடுப்பது போல், அ.மார்க்ஸ் தயார். கேள்வியும் நானே, பதிலும் நானே என்று ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு அணைவான கரம் கொடுத்துச் செல்பவராக,விடுதலைப் போராட்டுத்துக்கு எதிரான பார்வையை வெளிப்படுத்துகிறார். இவ்வித எதிர்நிலைப்பாடுகள் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது என்ற நோக்கம் நிறைவேற, தானொரு எதிர்ச் சிந்தனையாளன் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள கண்ணும் கருத்துமாய் அவர் வளர்த்து வந்த பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.

எதைப் பிரதானமாகக் கொள்ள வேண்டுமோ, அதைக் கவனிக்காமல் விடுவது அ.மார்க்ஸி ன் சிந்திப்பு முறை, இலங்கை சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் 1948 முதலும் அதற்கும் முன்பிருந்தே தொடர்ந்து வரும் இந்தியத் தலையீடு பற்றி அவர் கவனம் கொள்ளவில்லை. தனக்குக் கட்டுப்பட்ட ஒரு நிலப்பரப்பாக இலங்கை வாழ வேண்டும் என்ற இந்திய ஆட்சியாளர்களின் நினைப்பு பற்றி அவர் கருத்துச் செலுத்தவில்லை. தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் காரியங்கள் செய்வதற்கு இந்தியா மூலசக்தியாய் இயங்குகிறது. இந்தியாவே போரை நடத்துகிறது என்பதற்கு சமீபமாகக் கிடைத்த ஆதாரங்கள் உள்ளன. இந்திய அமைதிப் படை என்ற பெயரில் நேரடியாக உள்ளிறங்கியது அன்று. இன்று மறைவாய் இராணுவத்தை உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் தன் நாட்டுக்குள் எழுந்துள்ள பயங்கரவாதத்தை அழித்தால் பரவாயில்லை. இன்னொரு நாட்டுக்குள் போய் அந்த சேவையைச் செய்கிறது.

(1. இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம் 2) தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் - மு.திருநாவுக்கரசு எழுதிய நுhல்களை அ.மார்க்ஸ் வாசிக்க வேண்டும்,) பயங்கரவாதிகளையும் விடுதலைப் போராளிகளையும் சமமாகப் பாவித்து ஈழத்து பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம் இலங்கையைத் தனது கக்கத்துக்குள் இடுக்கி வைத்துக் கொள்ள இந்தியா எத்தனிக்கிறது. அரச பயங்கரவாதத்துக்குப் போதையூட்டும் `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்` என்ற முழக்கம் செப் 11, 2001ல் அமெரிக்கா வைத்த முழக்கம். சர்வதேச சமூகத்துக்கு தவறான வழிகாட்டுதலைக் காட்டிய முழக்கம்.

``அது மேற்கு உலகுக்கு எதிராக தீவிரவாதிகளை ஒன்று சேர வைத்தது. இது தான் அதனுடைய விளைவு. நாங்கள் வரலாற்றுத் தவறுகள் (அமெரிக்கா, பிரிட்டன்) செய்து விட்டோம். எல்லாக் குழுக்களையும் சமமாகப் பாவித்தது வரலாற்றுத் தவறு. தாயக மக்களுக்குப் போராடுகிற விடுதலைப் புலிகளையும் மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான லஸ்கர். இ.தொய்பா அமைப்பையும் வேறபடுத்திப் பார்க்கத் தவறி விட்டோம். விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகளையும் சமமாகக் கருதும் ஒப்புமை வெறுப்பைத் தரக்கூடியது. அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டது மிகப் பெரிய தவறு. பயங்கரவாதம் ஒரு கொலை தந்திரோபயம் (Tactics) .அது ஒரு நிறுவனமோ தத்துவமோ அல்ல ``

இவ்வாறு பேசியவர் மும்பையில் எந்த தாஜ் ஓட்டலில்` `லஸ்கர். இ. தொய்பா` பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றதோ ,அதே ஓட்டலில் இரண்டு மாதத்தின் பின் நடந்த அரங்கில் பேசிய பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்.

சென்னையில் சனவரி 2009-ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின்போது பிரபாகரன், விடுதலைப் புலிகள் போன்ற புத்தங்கள் விற்கக்கூடாது என போலீஸ் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டு`` இந்திய அரசு, தமிழக அரசு, இந்தியக் கலாச்சாரம், மதக் கலாச்சாரத்துக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறோம்.. போலீஸ் சொன்னால் அதை எடுத்தாக வேண்டும்`` என்று பதிப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசனைப் பேச வைத்தது வரை இந்த பயங்கரவாதக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சி நீண்டிருக்கிறது.

`1975/1985 கால கட்டத்தின் பின் இன்று உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. விடுதலைப் புலிகள் இவைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை` என்று விமர்ச்சிக்கிற அ.மார்க்ஸ் மிலிபேண்ட் சொன்ன காலமாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

`` 90களுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எல்லா இடதுசாரி இயக்கங்களும் தம் அணுகல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன`` என்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் இலங்கை இடதுசாரிகள் குறிப்பாய் ஈழத்தில் செயல்பட்ட இடதுசாரிகள் 1983க்கு பின் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பது போலவே பின் நவீனத்துவாதியான அ.மார்க்ஸும் கணக்கில் கொள்ளவயில்லை

1980களின் பின் ஈழத்தமிழர் பிரதேசத்தில் இடதுசாரி அரசியல் என்ற ஒன்று கிடையாது. இனத்துவ அரசியல்தான் முன்னுக்கு வந்தது. இனத்துவ அரசியலிலிருந்து இன்றுள்ள இனவிடுதலைப் போர் எழுந்து வந்தது.

ஈழத்தமிழர் மத்தியில் முதன் முதலாக ஆயுதப் போராட்ட அரசியல் முறையை உண்டு பண்ணியவர்கள் இந்த இடதுசாரிகள். இவர்கள் சீன சார்பு அரசியல், போராட்டம் பற்றி பேசினர். ஓப்பீட்டளவில் இலங்கை இடதுசாரிகளை விட, முற்போக்காளர்களாகவும், புரட்சிகர உள்ளடக்கப் பண்புகள் கொண்டவர்களாகவும் இருந்த ஈழத்தின் இந்த சீன சார்பு இடதுசாரிகள் ஈழத் தமிழ் மக்கள் மீது, சிங்களப் பேரின ஒடுக்குமுறைகள் திரண்டபோது அதை எதிர்த்து நின்று முறியடிக்கத் திராணியற்றவர்களாக ஆகினர். தமிழர் என்ற அடையாளத்தை ஒடுக்கப்படும் தேசிய இன அடையாளமாக எடுத்துக் கொண்டு, அதன் சார்பில் குரல் எழுப்ப முன் வந்தாரில்லை. சீனச் சார்பு கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகதாசன் ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்தார். ( அ.மார்க்ஸக்கு முன்னரே அவர் பின் நவீனத்துவவாதியாக மாறிவிட்டார் போல)

தேசியத்துடன் இணையாத மார்க்சியத்தால் பயனில்லை. லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசியல் அனுபவங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ரெஜிரப்கே இவ்வாறு குறிப்பிடுவார். அதேபோல் சோசலிசக் கூறுகளை, பண்புகளை உள்வாங்கிக் கொள்ளாத தேசியத்தால் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பயனில்லை என்பார் யதீந்திரா என்ற ஈழத்து எழுத்தாளர். மாறாக தேசியத்தை உடைக்காத மார்க்சியத்தால் பயனில்லை என்ற கருத்தை பின் நவீனத்துவவாதிகள் கொண்டிருக்கிறார்கள். தேசியத்தை உடைப்பது, மார்க்சியத்தை உடைப்பது, அல்லது இரண்டையுமே சேர்ந்து உடைப்பது என்ற போக்கில் போகிவறவர்கள் தாம் இப்போதைய பின் நவீனத்துவவாதிகள். தேசியம், தேசம்- என்ற உருவாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர், அ.மார்க்ஸ். தேசியம் ஒரு கற்பிதம் என்பார். ஆதிக்க நிலையினர் தேசியத்தை கட்டமைப்பதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் கட்டமைக்கும் தேசியத்துக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு, இரண்டும் ஒன்றல்ல என அ.மார்க்ஸ் காணவில்லை.

``தேசிய இனம் என்ற பேரடையாளத்தை இறுக்கமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் கட்டமைக்கும்போது வர்க்கம் உள்ளிட்ட பல்வேறு சிறு அடையாளங்கள் அதன் மூலம் ஒடுக்கப்படும்`` என்று விரிவுரையாற்றுகிறார் பின் நவீனத்துவவாதி அ.மார்க்ஸ்

இன விடுதலைப் போரின் போது வர்க்கம், சாதி, வட்டார அடையாளங்கள் ஒடுக்கப்படுதல் அல்ல, ஒதுங்கிப் போகும். மக்கள் திரளை விடுவிக்கப் பிரதானமான ஒன்றை முன்னெடுக்கையில் மற்றவைகளையும் அதே நேரத்தில் தோளில் துhக்கி வைத்துக்கொண்டால் நனைந்த பொதி சுமக்கிற கதையாகி விடும். . அதே பொழுதில் இவைகளை உள் வாங்கிய எதிர்கொள்ளல் நடைமுறையில் இருக்கும். பிரதான முரண் விலக்கப்படுகிறபோது ,ஒதுங்கியிருந்த அகமுரண்கள் முன்னுக்கு வரும். முதன்மையிடத்துக்கு வந்த அவை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தி தீர்க்கப்படும். இது யூகமோ, அனுமானமோ அல்ல. வரலாற்றில் இதுதான் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறை. பின் நவீனத்துவம் பிரச்னைகளைத் தீர்க்கும் முறையை அறியாது, புதிது புதிதாகப் பேசுதல், எதையும் கேள்விக்குட்படுத்துதல்,மாற்றை முன்வைக்காது மாறி மாறிக் கேள்விகளைக் குவித்தல்-மட்டுமே பின் நவீனத்துவ வேலை.
``சிங்கள மேலாதிக்கம் தமிழர்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டபோது இவர் முதலாளி,இவர் தொழிலாளி,இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற வேறுபாடுகள பார்த்து தனது ஒடுக்குமுறையைச் செலுத்தவில்லை. தமிழர் என்ற அடையாளத்தின் மீதே தனது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தது (சிங்களப் பேரினத்தை அண்டி அடிமைப் பாட்டுப் பாடியவர்கள் வாழ முடிந்தது) , சிங்களப் பேரினம் எந்த அடையாளத்தை அழித்தொழிக்க முற்பட்டதோ, அந்த அடையாளத்தை மையப்படுத்தியே அன்றைய ஈழத்தமிழர் தேசிய அரசியல் தோற்றம் கொண்டது. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையின் விரிவும், அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வுகளை இடதுசாரிகளால் தமது அரசியல் தளத்தில் பிரதிபலிக்க முடியாமல் போனமையும் தான் இடதுசாரி அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்தது ``– என்று சுட்டும் விழி இதழின் (திருகோணமலை) ஆசிரியரும்,எழுத்தாளருமான யதீந்திரா குறிப்பிடுகிறார்.
இனத்துவ ஒடுக்குமுறைக்குள்ளிலிருந்து எழுந்த இனத்துவ அரசியலைக் கண்டு கொள்ளாமல் வர்க்கம்,சாதிய ஒடுக்குமுறைகளை முன்னிறுத்திய வரலாற்றுப் பிழை அந்தக் காலத்தில் நிகழ்ந்தது. எது பிரதான முரண் என்பதைக் காணத் தவறினார்கள்.

ம.க.இ.க வினர் புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று சொல்கிறார்களாம் ;
மகிழ்ச்சிப் பெருக்குடன் எடுத்துப் போட்டுக் கொள்கிறார் அ.மா. புத்தகம் பேசுது இதழினுhடாக அ.மா வைப் பேசச் செய்து இன விடுதலைப் போருக்கு எதிரான நிலை எடுத்துள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை ராணுவமும், புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென்கிறது. `` தாக்குபவனையும் தற்காத்துக் கொள்பவனையும் சமமாகப் பார்க்கும் இக்கூற்று சிங்கள இனவெறிக்குத் துணைபோவதாகும்`` என்று பதில் கொடுத்துள்ளனர் ம.க.இ.க. வினர் .
``கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன, வென்றதில்லை இனவெறி ஆதிக்கம் ஓயப்போவதுமில்லை தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர். அப்போருக்கு ஆதரவாக தமிழகமே, விழித்தெழு, போராடு`` என்று ம.க.இ.க வினர் குரல் எழுப்புகிறார்களே, இதுபற்றி அ.மா என்ன சொல்கிறார்?. தனக்குள் வரைந்துள்ள குரூர ஓவியத்தை வெளிக்காட்ட புத்தகம் பேசுது இதழையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் அதுபோலவே, ம.க.இ.க வின் வழியாகவும் முண்டும் சூட்சுமம் புரிகிறது.

``2001 செப்டம்பர் 11- க்கு பின் மாறியுள்ள உலகநிலையைப் புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி கண்டுகொள்வதும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை`` என்று மட்டையடி போடுகிற அ.மார்க்ஸ், செப்டம்பர் 11 ல் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பிம்பத்தை உலகப் பேரரசு வாதத்தின் பக்கம் நின்ற மில்லிபாண்ட் போன்றவர்கள் உடைத்து வீசுகிறபோது அதை ஏற்கிறாரா? எதிர்க்கிறாரா? எந்தப்பக்கம் நிற்கிhர்?

``ஈழ விடுதலை, தனி ஈழத்தை அங்கீகரித்தல் என்ற முழக்கங்கள் தமிழ் நாட்டிலிருந்துதான் ஒலிக்கிறதே ஒழிய ,ஈழத்தில் இன்று யாரும் இதைச் சொல்வது கிடையாது. விடுதலைப் புலிகள் உட்பட இதுவே இன்றைய நிலை. இந்த ஆண்டு மாவீரர் நாள் உரையின் போதோ, சென்ற ஆண்டிலோ பிரபாகரன் தனி ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை ``என்று கூறுகிறார் அ.மார்க்ஸ்

இந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையிலிருந்து சில வாசகங்கள்.
``இந்த மண் எமக்குச் சொந்தமானது, எமது இனவேர் ஆழ வேரோடியுள்ள இந்த மண்ணிலே நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நிய ஆதிக்கமோ தலையீடோ இன்றி எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
``இந்த மண்ணை ஆக்கிரமித்து அடக்கியாள சிங்களம் திமிர் கொண்டு நிற்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் கலையும், எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும், இது திண்ணம்``
``தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்``

தனி ஈழக் கோரிக்கையை பிரபாகரன் முன் வைக்கவில்லை` என்று அபத்தமான ஒரு பொய்யை, , தன்னறிவின் நம்பகத்தன்மையை மட்டுமே கொண்டு பேசுகிற அ.மா வைத் தவிர வேறு யாராலும் உதிர்க்க முடியாது.

``தனி ஈழம் என்பது மட்டுமல்ல, கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்கு கூட ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது ``என ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்கிறார். ராசபக்ஷேக்களும் கருணாக்களும் கூறுவதையே இவரும் கூறிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? இன்றைக்கே தமிழ்ப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களிடையே ஐ.நா மூலம் ஒரு வாக்கெடுப்பு தமிழ் மக்களிடையே மட்டுமே நடத்தப் பட வேண்டும் என இயக்கம் எழுந்தால், அவ்வாறே கருத்துக் கணிப்பும் வந்தால் அ.மார்க்ஸ் கண்ட கனவெல்லாம் குப்பைக் கூடைக்குப் போகும்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி மற்றும் 1990க்கு பிந்திய உலகில் ஏற்பட்ட மாற்றங்களை புலிகள் கணக்கில் கொள்ளவில்லை என்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகுதான் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளாக புலிகள் வீரியமாக அதிவேகம் கொண்டனர். தேசிய இனங்களின் ஒடுக்குமுறையில்தான் சோவியத் யூனியன் துண்டு துண்டாகச் சிதறியது என்ற உண்மை அவர்களுக்குத் துணையாக வந்தது. இவ்வாறு வரலாற்றுப் பேருண்மையை மறைக்கிற `நல்ல குணம்` அ.மார்க்ஸ்க்கு நிறைய உண்டு.

``வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை `என்கிற குற்றச்சாட்டை வைக்கிறபோது, அவர்கள் நாடு திரும்பாததற்கு காரணம் யார்? புலிகள் அந்தப் பிழைக்கு வருந்தி திரும்ப அழைத்தபோதும் தங்களின் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்ல முடியாதததற்கு வடக்கில் நிலைகொண்டுள்ள ராணுவம்தான் காரணம் என்ற நடைமுறை உண்மையை` ராணுவம் அகன்ற பின் முஸ்லீம்கள் தங்களிடத்தில் குடியேற பெருவிருப்போடு இருக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து வந்த செய்திகளை ஷோபா சக்தியும் சிராஜுதீனும் அவருக்குத் தர மாட்டார்கள்.

`கிழக்கில் பள்ளி வாசலில் தொழுதுகொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவித மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது` என்று புலிகளுக்கு எதிரான முகவராக தன்னைக் வெளிப்படுத்திக் கொள்கிறார்.. இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் புலிகளின் பக்தர்கள், புலிகளின் முகவர்கள் என்றால் நீங்கள் கருணாவின் முகவரா? இல்லை பிள்ளையானின் முகவரா என்கிற கேள்வி நம் சிந்தனைக் கதவுகளை ஓங்கித் தட்டுவதற்காக வாசலில் காத்து நிற்கிறது..

அக்டோபர் 2008, தீராநதி இதழில் பாரிஸில் வாழும் எழுத்தாளர் ஷோபா சக்தியை அ.மார்க்ஸ் நேர்காணல் செய்திருந்தார். `` இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியான ஷோபா சக்தியின் இக்கருத்துக்களை வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாடுடன் முன்வைக்கிறேன் ``என்று அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஈழப் போராட்டத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக தனக்குள்ளிருக்கும் கருத்துக்களை மட்டும் முன்வைத்து அதற்கு ஒப்புதலும் பெற இதுபோன்ற நேர்காணல் வசதியாக அமைந்து விடுகிறது.

இந்த நேர்காணலில் ஷோபாசக்தி `` சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர, மற்றெல்லா பெரிய அரசியல் கட்சிகளும் பங்கு கொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது . அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பிள்ளையான் முதலமைச்சரானார். தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில் பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள்,ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக் கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது `` பிள்ளையான், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆவதற்கு முன்னும், ஆன பின்னும் என கிழக்கு மாகாணத்தில் நடப்பவைகளுக்கு மாறான பொய்களை அடுக்கிக் கொண்டு போகிறபோது அவைகளை ஏற்றுக் கொள்கிறார் அ.மார்க்ஸ் (உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன்)

ஆனால் கொழும்புவிலும், கிழக்கு மாகாணத்திலும் இயல்பாக நடந்து வரும் வெள்ளை வேன் கடத்தல்கள், கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றை அங்கு சென்று திரும்பிய, போர்ப் பகுதிகளுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட செய்தியாளர் கவிதா அவுட் லுக் இதழில் அம்பலப்படுத்தியிருந்தார். ` உங்கள புத்தர் இதையா சென்னார்` என்ற தலைப்பிட்டு காலச்சுவட்டிலும் (சனவரி, 2009) எழுதியிருந்தார்.

``போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாநிலத்தில் 49,000/- கைம்பெண்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு அளிக்காவிட்டால் அவர்களில் பலர் மனித வெடிகுண்டுகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்``

சமீபத்தில ஐ.நா அதிகாரிளின் எச்சரிக்கையை சிங்கள இதழ்களில் வந்த செய்திகள் எடுத்துச் சொல்கின்றன. 49000 – கைம்பெண்களில், 35000 பேர் 30 வயதுக்குக் கீழானவர்கள். இது தவிர போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த 8000 பேரும் வேலையில்லாது தவிக்கின்றனர். இந்தக் கைம்பெண்கள், போர்ப்படையில் சேர்ந்து மனித வெடிகுண்டாய் மாறுவதைத் தவிர, வேறு வழியில்லை என்ற உண்மை நிலவரத்துக்கு, இராணுவமும், கருணா, பிள்ளையான் போன்ற துணை ராணுவக் குழுக்களும், டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசாங்கத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட செல்லப்பிள்ளைகளும் காரணமென்தை எல்லோரும் அறிவர். எல்லோரும் அறிய உலவும் உண்மைகளை உயிரோடு புதைத்து விட்டு, `எல்லாம் சுபிட்சமாக நடக்கிறது` என்று ஷோபா சக்தி சொல்வதற்கு அ.மார்க்ஸ் முழுiமான உடன்பாட்டுடன் ஏற்கிறாராம்.

ஷோபா சக்தியின் வாக்கமூலத்தையும் அ.மார்க்ஸின் ஒப்புதலையும் மறுப்பது போல, அ.மார்க்சே குறிப்பிடுகிறார் ``கிழக்கு மாகாணத்தில் சில மாதங்களுக்கு முன் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 24 கொலைகள் நடந்துள்ளன. ,,,,,,,,,,,,, நவம்பரில் மட்டும் மட்டக் களப்பு மாவட்டத்தில் 24 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை அமைப்பு சொல்கிறது.`` (தீராநதி பிப்ரவரி 2009- பக்.47). ஆனால் ஷோபா சக்தி சொன்ன பொய்யும் அதை அவர் உடன்பாட்டுடன் ஏற்றுக் கொண்டதாக சொல்லுகிற வாக்குமூலமும் இந்த இடத்தில் அவருக்கு மறந்து போய்விட்டது போல.

உண்மையான படைப்பு மனம் கைகூடி வந்திருக்குமானால், மனச்சாட்சி நிமிர்ந்து நின்றிருந்தால் பேரினவாத அரசின் மனித உரிமை மீறல் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதை நோக்கி `புத்தகம் பேசுது நேர்காணல்` நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் எந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வது என்ற விவஸ்தை இல்லாமல நேர்காணலை நகர்த்தியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

இன்று வன்னிப் பிரதேசத்தில் இராணுவத் தலைமைக்கும் கட்டுப்படாமல் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் தனதுவிருப்பத்தைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும் களச் சர்வாதிகாரியாக மாறியிருப்பது போல், தன் தலைமைக்குத் தெரியாமலே தன்னிச்சையான முடிவுகள் எடுத்துச் செயற்படுத்திய கருணா தன்னுடைய செயல்பாடுகளைத் தட்டிக் கேட்ட தலைமையுடன் முரண்படுதலினுhடாக ரணில் விக்கிரமிசிங்காவினுடனான நேசத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ராசபக்ஷேயின் கருணையால் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்ட கருணா தனது முதல் உரையில் ``கிழக்கில் முஸ்லீம்களைப் புலிகள் கொன்றார்கள்`` என்று உரை ஆற்றியபோது ``நீர்தானே கொன்றீர் ``என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நாடாளுமன்றம் அதிரும்படி கேட்டார். இந்தத் தகவலையெல்லாம் ஷோபா சக்தியும், சிராஜுதீனும் அ.மா.வுக்குத் தரமாட்டார்கள். இது போன்றவர்களைத் தாண்டி இவைகளைத் தேடிப் பெறுகிற எல்லைகளையும் முன் கூட்டிய முடிவுகளால் அவரும் அடைத்து விட்டார்.

வெளிப்படையான நேரடி எதிரியை விட ஒளிந்து நின்று செயல்படும் எதிரி ஆபத்தானவன். ரணில் விக்கிரமிசிங்க அத்தகைய ஒரு எதிரி. இலங்கை அதிபராக இருந்தபோது நார்வேயின் முன் முயற்சியால் அனைத்துலக நாடுகளின் அனுசரனையோடு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 சனவரியில் கையெழுத்தானது. குறிப்பிடப்பட்ட எதையும் நிறைவேற்றாமல் எல்லா ஷரத்துக்களையும் இலங்கை மீறியது.

முக்கியமானவை மூன்று
1)இராணுவம் கைப்பற்றி தங்கியுள்ள வீடுகள், பள்ளிகள்,மருத்துவ மனைகளைக் காலிசெய்ய வேண்டும்.
2)அகதிகளாக அலையும் ஒருலட்சத்துக்கு மேலான மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குச் செல்லஅனுமதிக்க வேண்டும்.
3) பாதுகாப்பு வளையம் என்று பெயரிடப்பட்ட இராணுவ வளையத்தை நீக்க வேண்டும்.

அமைதிப் பேச்சு வார்த்தையின்போது கையெழுத்திட்ட ஒப்பந்த விதிகளில் எதுவொன்றையும் செயல்படுத்தாத ரணில் விக்கிரமசிங்கேயும், அதன் பின் வந்த ராசபக்ஷேயும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தபோது, சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத் தானும் இதனைக் கண்டிக்கவில்லை. அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா என்று பலரிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துப் படைகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார் ரணில் விக்கிரமிசிங்கே. கருணாவை வளைத்துப் போட்டார். ``நீங்கள் பெறுகிற வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளமிட்டவன் நான்`` என்று வெளிப்படையாக ரணில் உரிமை கொண்டாடுகிறார் என்றால், அவர் அமைதியாய் இருந்து அரங்கேற்றிய இனவெறியன்; ராச பக்ஷே கொக்கரிக்கும் இன வெறியன். தடாலடித் தாண்டவம் நடத்தும் ஜெயலலிதாவை அடையாளம் கண்டு கொள்வதினும் தடவிக்கொடுத்து கழுத்தறுக்கும் கலைஞரை அடையாளம் காணுவதுதானே தமிழகத்துக்கு கடினமாக இருக்கிறது. வஞ்சகனை வீழ்த்துவது முதற்கடமையென முடிவுகொண்டு புலிகள் ரணிலை வீழ்த்தினார்கள். உண்மையின் இந்தப் பக்கத்தை காணாமல் ``ரணில் விக்கிரமிசிங்கேக்கு ஓட்டுப்போடவேண்டாமெனச் சொல்லி ராசபக்ஷே பெற்றி பெற வழிவகுத்தனர் புலிகள்`` என ஓட்டாண்டித்தனமான வாதத்தை முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்

``பிற இயக்கங்களை அழித்தது, கருத்துரிமையைப் பறித்தது, கிழக்கு மாகாணத்தவர் எல்லோரையும் அந்நியப்படுத்தியது, ராஜிவ்காந்தி கொலை மூலம் இந்திய அரசை நிரந்தரப் பகையாக்கிக் கொண்டது`` - புலிகள் மீது அ.மா.பட்டியலிடும் குற்றங்கள் இவை..
இந்தச் சகோதரக் கொலைகள் பற்றி நான் நிறையவே விளக்கியிருக்கிறேன்.

``போராளிக் குழுக்களுக்குள்ளே மோதலையும் சாதலையும் ஏற்படுத்திய இந்தியப் புலனாய்வுத் துறையான ரா (சுஹறு) மாநிலஅரசுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் மோதலை உண்டாக்க முயற்சிகள் செய்கிறது`` என 1990-ல் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். சட்டமன்றப் பதிவு பொய் பேசாது. அதை ஒருபக்கம் தள்ளிவிட்டு சகோதரக் கொலை என வாயிலும் மாரிலும் அடித்தபடி கலைஞர் புலம்புவதை புரிந்து கொள்ள இயலும். அவர் அரசியல்வாதி. அதே பாணியில் அ.மார்க்ஸ்ம் பேசினால் அவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இந்திய அமைதிப் படையிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிற நிகழ்வு நடந்துகொண்டிருக்கிற போது, இன்னொரு பக்கத்தில் டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப் ஆகிய இயக்கங்களுக்கு ராணுவம் மூலம் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்வை `ரா` (RAW) நடத்திக் கொண்டிருந்தது. புலிகளின் ஆயுத ஒப்படைப்பு தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டபோது, `இ.பி.ஆர்.எல்.எப்` `டெலோ` போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி ரா(RAW) நடத்திய இன்னொரு கூத்து ஒளிபரப்பாகவே யில்லை. சில நாட்கள் கடந்து புலிகளிடமிருந்து பெற்ற ஆயுதங்களையும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிக் குழுக்களுக்கு ரா வழங்கியது. சுயமான நிலைபாடுடைய புலிகளை அமுக்கி அழித்து விடுவதும், சரணாகதி நிலையுடைய பிற குழுக்களுக்கு ஆதரவு தந்து வளர்த்து விடுவதும் ராவும் இந்திய ராணுவமும் அன்றைக்கு பிரதான பணிகளாக மேற்கொண்டன. இந்திய அமைதிப்படையின் தளபதி கர்னல் உறர்கரசத்சிங் Intervention in Srilanka என்ற நூலில் இதை தெளிவுபட எழுதியுள்ளார். இதையெல்லாம் அ.மார்க்ஸ் போன்றவர்கள் படிக்க வேண்டும் . இது போன்ற நூல்களை மனச்சாட்சி அறியவே ஒதுக்கி வைத்து விட்டு, மற்றைய செய்திகளையெல்லாம் எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்கள்.

.அகமுரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் அனைத்துக் கதவுகளையும் அடைத்தது விடுதலைப் புலிகள் மட்டுமேயல்ல. மற்ற போராளி இயக்கங்களும் தான்.

`` போராட்டம் உக்கிரம் அடைந்த ஒருகால கட்டத்திலே ,ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதே இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுதபலத்தை மட்டுமல்லாமல் அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக `ரா` (RAW) அதிகாரிகளும் இந்திய ராஜதந்திரிகளுமே விளங்கினர். அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலைசெய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சுகோதர இயக்கங்கள் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள்.`` -- தீராநதி அக்டோபர் 2008 - ஷோபா சக்தியின் நேர்காணல் ஒப்புதல் வாக்குமூலமே இந்த அகமுரண் கொலைகள் எதனால், யாரால் நிகழ்ந்தன என்பதற்குச் சாட்சி.

எல்லா குழுவும் இந்திய உளவுத்துறையின் கையடக்கமாய் மாறிச் செயல்பட்ட காலத்தில் (1985) விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இந்திய அதிகாரச் சதிகளுக்கு எதிராக நின்று போராடியது. இன்றைய பொழுதில் விடுதலைப் புலிகள் முன்னணிப் படையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் அரசியல் தளத்தினராகவும் ஆகியுள்ளனர்.

ராஜிவ்காந்தி,ஜெயவர்த்தன ஒப்பந்தம் எமது மக்களுக்கு எதிரானது என புலிகள் அதை ஏற்கவில்லை. மற்ற ஆயுதக் குழுக்கள் ஏற்றுக்கொண்டு ராவுடனும் இந்திய ராணுவத்தினுடையவும் கையாட்களாகவும் மாறினார்கள். மற்ற குழுக்களை ஆயுதக் குழுவாக மட்டுமே வைத்திருப்பது இந்திய அரசுக்கு உகந்ததாக இருந்தது.

ராஜிவ் காந்தி கொலை பற்றி அகில இந்திய காங்கிரசார்,கலைஞர்,சாதாரண மக்கள் போன்றோரின் பொதுப்புத்தியின் தடத்திலேயே அ.மார்க்ஸ்&ம் பயணிக்கிறார். நரசிம்மராவைப் பிரதமராக்குவதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான சந்திராசாமி,விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறிய ஒரு பிரிவினைரைக் கைவசப்படுத்தி நடத்திய அரசியல்கொலை அது என்பது இப்போது வெளியாகியிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் துhக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று விடுதலை பெற்றவர் பெங்களூரு ரங்கநாத். ராஜிவ் கொலையாளிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர். ,கொலையாளிகள் விடுதலைப் புலிகள் அல்ல; ,விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்னர் பிரிந்தவர்கள் என்பது பற்றி- அவர்கள் சந்திராசாமியிடம் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது பற்றி- அடைக்கலம் கொடுத்த பெங்களூர் ரங்கநாத் இந்த உண்மைகளைத் சோனியா காந்தியிடம் தெரிவித்தார். சோனியா காந்தி அதை டேப்பில் பதிவு செய்து கொண்டது பற்றி - காங்கிரசின் மூத்த தலைவரே தன் கணவரைக் கொன்றார் என்ற உண்மையை வெளியிட்டால் காங்கிரசுக்குக் கேவலம் என சோனியா அமைதிகாப்பது பற்றி - குமுதம் ரிப்போர்ட்டர் விவரமாக வெளிப்படுத்தியுள்ளது. (குமுதம் ரிப்போர்ட்டர்25.12.2008)

புலிகளின் எல்லாவிதமான மனித உரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ மௌனமாகவோ ஆதரிக்கும் நிலையை புலிகளின் முகவர்கள் மேற்கொண்டனர் என்று பூனைக்குட்டியை எந்தத் தெருவில் எங்கு கொண்டு போய்விட்டாலும் , அது சொந்த வீட்டிற்கு வந்து நிற்பது போல் மீண்டும் புலிகள் எதிர்ப்பு என்ற புள்ளியிலேயே வந்து இறங்கி நிற்கிறார் அ.மார்க்ஸ்.

இந்திய விடுதலைப் போராக இருக்கட்டும், ருசியப் புரட்சியாக இருக்கட்டும். எத்தனை குழுக்கள், எத்தனை அணுகுமுறை,எத்தனை உள் அழிப்புகள், ஒழிப்புகள், எதுவுமே வரலாறு தெரியாதவர்கள் போல் வைக்கிற இத்தகைய வாதம் தன்னுடைய ஒரு சார்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்த இவர்கள் எந்தச் சூழலிலும் எதுக்காகவும் எத்தகைய நிலைக்கும் போவார்கள் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கருத்தாக்கங்களை உருவாக்குகிற அறிவு ஜீவிகள் பலரும் `சோ` வின் தரத்தைத் தாண்டியவராக இல்லை என்பதுதான் அறிவுலக அவலம்.

1983 கருப்பு ஜுலை என்றழைக்கப்படும் இனப் படுகொலையின்போதும், அதன் பின்னரும், சிந்திய குருதியை நினைவு கூறும் `நெடுங்குருதி` என்னும் நிகழ்வு பாரிஸில் நடந்தது.. நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னால் அதன் ஏற்பட்டாளரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பெற்றது. இந்த செய்தி கேள்விப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதலளித்திருந்த பலர் அதிலிருந்து விலகிக் கொண்டனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அ.மார்க்ஸ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு துப்பாக்கியும் வன்முறையும் வழியல்ல என்று பேசிவருகிறவர் அ.மார்க்ஸ்

``வன்முறைக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் இந்தியாவில் பேசி வருகிற நீங்கள் எந்தத் தார்மீக அடிப்படையில் நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னான ஏற்பாட்டாளரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள்`` -- என அ.மார்க்ஸ்க்குத் திறந்த கடிதம் - என்று பாரிஸிலிருந்து அசோக் எழுதிய கடிதத்துக்கு (தீராநதி நவம்பர் 2008) அ.மா. விடமிருந்து இதுவரை பதிலில்லை. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்று தொடர்ந்து எழுதி வருகிறவருக்கு இதற்குப் பதில் பேசும் துணிவு வரவில்லை.

``புலிகளின் எல்லாவித மனித உரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ மௌனமாகவோ ஆதரிக்கும் புலிகளின் முகவர்கள்`` என்று உரத்துப் பேசும் அ. மார்க்ஸ் இந்த துப்பாக்கிச் சூட்டு வன்முறைக்கு பதில் பேசாது தந்திரமாக ஒதுங்கிக் கொள்வது ஏன்? இந்தக் கள்ள மௌனம் எதன் பொருட்டு ?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அ. மார்க்ஸ் அளவுக்கு விமரிசித்தவர் எவரும் இல்லை. இன்று ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராய்க் கருத்துத் தெரிவிக்க அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு முகவர் தேவையை அ.மார்க்ஸ் பூர்த்தி செய்கிறார்.. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய ஒரு ஆள் கிடைத்து விட்டதில் அவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. முன்னர் ஏன் மார்க்சிஸ்டுகளை விமர்சனம் செய்தார், இப்போது ஏன் மாற்றிக் கொள்கிறார் என்ற கேள்விகளுக்கு இவரிடம் பதில் வராது. ஏனெனில் விவாதங்களை வடிவமைக்கிற அறிவாளிகளுக்கு சுயவிமர்சனம் கைகூடி வருவதில்லை .

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளும் இந்திய அரசும் பூமிப்பந்தின் எந்த மூலையில் மனித உரிமை மீறல் நிகழ்ந்தாலும் எகிறி, எகிறிக் குரல் கொடுப்பார்கள்; தமக்கருகே ஒரு இனம் கொல்லப்பட்டாலும், தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற பாதகத்தைக் கண்ட பின்னும், முகவாட்டமோ, சிறுமுணகலோ கொள்ளாமல் தம்வழி போவார்கள்.

ஈழத் தமிழிர் கழுவேற்றப்பட்டிருக்கும் வேளையில் அவர்களின் தீராத துயரத்துக்கு தீர்வு காண்பது நம் முதற்பணி. கழுவேற்றும் கரங்களை முறித்து அகற்றுவது அந்தப் பணி. விடுதலைப் போரினை வென்று காட்டுதல் அந்த மக்களுக்கு சுவாசிக்க கொஞ்சம் வெளியைத் தரும் என்ற கடமை செய்ய வேண்டிய நேரத்தில், அக முரண்பாடுகளை அலசி சரி செய்ய முயலுவோம் என வம்படித்துக் கொண்டிருப்பது போகாத ஊருக்கு வழிகாட்டுகிற கதை. ராசபக்ஷேயும், சிங்கள இனவெறியர்களும், கருணா போன்ற கயவாளிகளும் எந்த ஊருக்குப் போகவேண்டுமென்று நினைக்கிறார்களோ, அந்த இடத்துக்கு கைத்துணையாய் அழைத்துப் போக காங்கிரசாரும், இடது கம்யூனிஸ்டுகளும் போதுமே.

பிரான்சில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது (டர்பன்) தடை செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோசி இந்தியா வரும்போது இதுபற்றி அவரிடம் பேசி தடையை நீக்க வேண்டுமென்று சீக்கிய அமைப்புக்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டிருந்தன. சனவரி 25ந் தேதி டெல்லி வந்த சார்கோசியிடம் மன்மோகன் சிங் தலைப்பாகை பிரச்னை குறித்துப் பேசினார். மன்மோகன்சிங் உடல்நிலை குன்றி, மருத்துவ மனையிலிருந்த நேரம் அது. ``சில சூழ்நிலைகள் தவிர (கல்வி நிலையங்கள் போன்றவை) மற்றபடி சீக்கியர்கள் தலைப்பாகை அணியத் தடையில்லை; இருந்தாலும் அதையும் பரிசீலப்பதாக`` சார்கோசி தெரிவித்தார்.

ஒரு தலைப்பாகைப் பிரச்னை. தலைபோகும் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, அதுவும் உடல்நலிவுற்ற வேளையிலும் பிரதமர் பேசுகிறார் என்றால் அது தன் இனத்தின் பிரச்னை என்பதாலே பேசினார். ஆனால் `கிபீர்` விமானங்களின் குண்டுமழை வீச்சால் ஆயிரக்கணக்கில் தமிழ்த்தலைகள் ஈழத்தில் சிதறுகிறபோது வாய் திறக்கவேயில்லை. . மன்மோகன் என்பவர் இந்தியாவின் அடையாளம். மன்மோகன் சிங்குகள், பிரணாப் முகர்ஜிகள், பிரதமராகவோ அமைச்சர்களாகவோ இருக்கலாம். தமிழர்களுக்காகவா என்ற கேள்வி எழுந்து, தொடர்ந்துகொண்டே செல்கிறது.

தமிழீழ மக்கள் பற்றியோ அவர்கள் விடுதலைபற்றியோ எந்த அக்கறையுமற்று, எந்த நேரத்தில் எந்த விமரிசனத்தை முன்னிறுத்த வேண்டுமென்று காலம் பற்றிய கரிசனையில்லாமல் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிற அ.மார்க்ஸ் என்ற சகல தளச் சிந்தனையாளர் ஒருவரின் வீழ்ச்சியை நாம் சந்திக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது.

வெளியீடு
பா. செயப்பிரகாசம்
சு – 36. இளங்கோ தெரு
எம்.எம்.டி.ஏ குடியிருப்பு
அரும்பாக்கம், சென்னை 600106.
பேசி:- 94440 90186

Saturday, February 28, 2009

ஞானியிடம் கற்ககூடாதது...

சென்ற வார குமுதத்தில் பேச பொருளை பேச துணியும் ஞானி 'ரஹ்மானிடம் கற்போம்' என்ற தலைப்பில் ஒ பக்கத்தில் ரஹ்மானை பாராட்டி எழுதுகிறேன் பேர்வழி என்று பேசக்கூடாத பொருளை பேசி தொலைத்து இருக்கிறார்... ரஹ்மானிடம் கற்பதற்கு நிறைய விஷயம் இருக்கிறது மாற்று கருத்து இல்லை... அவரை புகழ்வதிலும் மாற்று கருத்து இல்லை.. இன்னும் கூட புகழலாம்... முழுத்தகுதியானவர் அவர்..

நம் பிரச்சனை அதுவல்ல... ரஹ்மானை புகழும் சாக்கில் இளையராஜாவை தேவையில்லாமல் இழுத்து கேவலப்படுத்தி இருக்கிறார்...ஒருவரை புகழும் போது மற்றவரை ஒப்பிட்டு இகழக்கூடாது என்ற இங்கிதம் தெரியாமல் எழுதி இருக்கிறார் அஞ்ஞானி... தெரியாமல் எழுதிருக்கிறார் என்று சொல்ல முடியாது எல்லா உலக வியாகியானங்களும் தெரிந்தவருக்கு இது தெரியாதா???.. அக தெரிந்தே எழுதி இருக்கிறார்...

அரசியல்வாதிகள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் உத்தமர் ஞானியார் இன்று அதே குற்றவாளி கூண்டில் நிற்கிறார்..

சரி எழுதியவர் இளையராஜாவின் இசையை விமர்சனம் செய்திருக்கலாம்... அவரின் பாடல்களை விமர்சித்து இருக்கலாம்... அதை விடுத்து அவரின் சொந்த வாழ்கையின் சில செயல்களையும், அவரின் ஆன்மீக வாழ்க்கையையும் விமர்சித்திருக்கிறார் இந்த கருத்துரிமை நாயகன் ஞானி... அவரது ஆன்மிகம் நடிப்பாம்... அதை வைத்து பணம் சம்பாதிக்கிறாராம் இளையராஜா... என்ன கண்டுபுடிப்பு பாருங்கள்...

என் பாட்டு என் பாட்டு நெஞ்சில் இருக்கும் பூங்காத்து, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ என்று வரும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அவரின் புகழை பரப்புப்ப அவர் செய்த வேலை என்கிறார் தன்னை தானே ஞானி என்று பட்டம் சூடி கொண்ட 'ஷங்கரன்...' மன்னிக்க'....சங்கரன்'...

கர்வம் இல்லாதவராம் ரஹ்மான்... மகிழ்ச்சி... அதை சுட்டிக்காட்டும் ஞானி கூடவே இளையராஜாவின் தலைகனத்தையும் சுட்டிக்காட்டுகிறார்... இதை விட அசிங்கமான பாராட்டு ரஹ்மானுக்கு யாரும் குடுத்திருக்க முடியாது...


ரஹ்மான் தான் அவருடன் வேலை பார்த்த இசை கலைஞரை முன்னிலை படுத்தியவராம் இளையராஜா அப்படி செய்வதில்லையாம்... தமிழ் திரை படங்களில் இசையை முன்னிலை படுத்தியதே இளையராஜா என்பதை தெரிந்ததே மறந்துவிடுகிறார்.. மறைத்துவிடுகிறார்...


ரஹ்மான் எப்படி வெறுப்பை விடுத்து அன்பை தேர்ந்தெடுத்தாரோ அதே போல் இளைஞர்களும் அன்பை தேர்தெடுக்க அறிவுரை கூறி இருக்கிறார். அந்த அறிவுரையை முதலில் அவர் தான் பின்பற்ற வேண்டும்... இளையராஜா என்ற கலைஞன் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பை அவர் முதலில் விடுக்க வேண்டும்...


இந்த நாளுக்காக பல நாள் காத்து இருந்திருக்கிறார் போல ஞானி, அவர் எழுத்துகளில் தெரியும் வஞ்சகம் அதை நன்றாக காட்டுகிறது...


இதற்க்கு காரணம் ஞானியின் மனதில் என்றும் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் என்று நான் கூறினால் ஞானியின் ஞானகுஞ்சுகள் என்னோடு சண்டைக்கு வருவார்கள் அகவே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்... நண்பர்களே...

ஒன்று மட்டும் நண்பர்களே, இளைஞர்களே... நாம் ரஹ்மானிடம் அன்பு செலுத்துவதை கற்கிறோமோ இல்லையோ ஞானியின் இந்த தனிமனித வெறுப்பை, ஆதிக்க புத்தி மனோபாவத்தை, ஒருவரை பாராட்டும் பொது இன்னொருவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நாம் கற்க கூடாது...அது தான் சாரம்..

வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு? -- ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்

தொழில்நுட்ப முன்னேற்றம் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவடையச் செய்வதை நாமெல்லாம் அறிவோம். இணைய வசதி வந்தபிறகு தனிமனித சுதந்திரத்தின் எல்லை, தேச எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்துவிட்டது. இணைய வசதி ஏராளமான தகவல்களை விரல்சொடுக்கும் நேரத்தில் நமக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமல்ல, நம்முடைய எண்ணங்களை அதே வேகத்தில் உலகெங்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் உதவியாக இருக்கிறது.


ஊடக நிறுவனங்கள் ஏராளமாக பெருகிவந்தாலும், தனி மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அவற்றில் போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. நாளேடுகளை எடுத்துக்கொண்டால் வாசகர் கடிதம் என்ற வாய்ப்பின் மூலம் மட்டும்தான் ஒரு தனிமனிதர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியும். தொலைக்காட்சி ஊடகங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் விரும்பிய பாட்டைக் கேட்ப தற்கு டயல் செய்து பேசலாமேயழிய தங்களுடைய கருத் துக்களை தனிநபர் ஒருவர் வெளிப்படுத்த முடியாது. இந்த நிலையில்தான் இளம் தலைமுறைக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இணையம்.


இணைய வசதியைப் பயன்படுத்தி ஏராளமான வர்கள் தமக்கான தனிப் பட்ட வலைப்பதிவுகளை இன்று உருவாக்கியிருக்கி றார்கள். இதுவரையி லான ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத கருத்துக்கள், எழுத முடியாத விஷயங்கள், விவாதிக்க முடியாத பிரச் னைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்கும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலைப்பதிவுகள் வசதி ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அந்த வகையில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள தனிமனித உரிமைகளின் விளக்கத்தை இந்த வசதி விரிவுபடுத்தியிருக்கிறது, வலுப்படுத்தியிருக்கிறது. இந்த வலைப்பதிவுகள் இன்று அரசியல் பிரச்னை களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் மங்களூரில் ஒரு 'பப்'பில் புகுந்து ஸ்ரீராம் சேனா தொண்டர்களால் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவருக்கு 'பிங்க்' நிற ஜட்டிகளை அனுப்பி வைக்கவேண்டும் என்ற போராட்டம் வலைப்பதிவின் மூலம்தான் நடத்தப்பட்டது. அது பெரிய அரசியல் சர்ச்சையை உண்டுபண்ணியது. இப்படி பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் இன்று வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன. ஈழத்தமிழர்கள்மீது ஏவப்பட்டுள்ள இனப்படுகொலையை எதிர்த்தும், அங்கு நடத்துகொண்டிருக்கும் போரை நிறுத்த வலியுறுத்தியும்கூட ஏராளமான வலைப்பதிவுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு இன்று மற்ற ஊடகங்களைவிட இணையமே மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இத்தகைய வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கேரளாவைச் சேர்ந்த அஜித் என்ற பத்தொன்பது வயது இளைஞர் ஆர்குட் இணையதளத்தில் சிவசேனாவுக்கு எதிரான குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்த குழுவில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு ஒரு பதிவை அவர் துவக்கியிருக்கின்றார். 2008-ம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த விவாதப் பதிவில் ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இதைப் பார்த்து கோபமடைந்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அஜித் மீது மகாராஷ்டிரா மாநிலம் தானே காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில், அஜித் மீது செக்ஷன் 506, 295-ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடனே, அஜித் கேரள உயர் நீதிமன்றத் தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். அதோடு நில்லாமல், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு ஆணையிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அஜித் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அஜித் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கும் மாணவர். இணைய வசதிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாக அவருக்கு தெரிந்திருக்கும். ஆகவே, இப்படியான வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளைப் பற்றி எவரேனும் புகார் செய்தால், அத்தகைய புகார்களை அவர் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, முறையாக நீதிமன்றத்துக்குச் சென்று தன்னு டைய பதிலை அஜித் தெரிவிக்கட்டும் என்று கூறிவிட்டது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இப்போது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இணைய தளம் என்பது ஒரு பொது அமைப்புதான் என்றாலும், அதை நாடிச்சென்று பயன்படுத்து கிறவர்கள் மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளை அறிந்துகொள்ள முடியும். வலைப்பதிவுகளை எடுத்துக்கொண்டால், அதுவும்கூட எல்லோரும் பார்க்கக்கூடியனவாக இருக்கவில்லை. சில வலைப்பதிவுகளுக்குச் சென்று பார்க்கவேண்டுமென்றால், முதலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. வலைப்பதிவுகளில் ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, பல்வேறு நபர்களும் அதில் கலந்துகொண்டு விவாதங் களை நடத்துகிற வாய்ப்பு இருப்பதால் அந்த வலைப்பதிவின் உள்ளடக்கமானது ஒரு நபருக்கு சொந்தமாக இருப்பதில்லை. ஒரு விவாதத்தில் பங்கேற்கிற எல்லோருடைய கருத்துகளுக்கும் அந்த வலைப்பதிவை நடத்துகிறவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்குமா? இந்தக் கேள்வியைத்தான் இன்று இணைய ரசிகர்கள் எழுப்புகின்றனர்.


பத்திரிகைகளில்கூட பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்ப தற்கு ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலே வாய்ப்பளிக்கப்படுகிறது. அவற்றை அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தேர்ந்தெடுத்து போடுகிறார். ஆனாலும், அந்தக் கருத்துகளை பத்திரிகையினுடைய தலையங்கத்துக்கு இணையாக கருத முடியாது. அதைப்போலத்தான் ஒரு வலைப்பதிவை நடத்துகிறவரின் கருத்தையும், அதில் பங்கேற்கிறவர்களின் கருத்துகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. இத்தகைய வலைப்பதிவுகளில், 'இதில் பங்கேற்கிறவர்களுடைய கருத்துக் கள் அவர்களுடைய சொந்தக் கருத்து கள்தானே தவிர, வலைப்பதிவை நடத்து கிறவரின் கருத்து அல்ல' என்று அதிலே அறிவிக்கப்பட்டிருக்கும். இதையும் மீறி அந்தக் கருத்துகளுக்கெல்லாம் விவா தத்தை துவக்கியவர்தான் பொறுப்பு என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? அதேசமயம், வலைப்பதிவு தவிர்த்து பெரிய நிறுவனங்கள் நடத்தி வரும் இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளை 'நெறியாளுனர்' ஒருவர் தீவிரமாகக் கண்காணித்து ஆபாச கருத்துக்களோ, வன்முறை மற்றும் வேறு துவேஷ உணர்வுகளைக் கொண்ட கருத்தோ இடம்பெறும்போது உடனடியாக நீக்குவதும் நடக்கத்தான் செய்கிறது.


பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத் தப்பட்டுவிட்டதாக சொல்லித்தான் சிவசேனா கட்சியினர் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்கள். இதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமேயானால், இதே வாதத்தை முன்வைத்து எவர் மீது வேண்டுமானாலும், எவரும் வழக்கு தொடுத்துவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். சமூகத்தின் பிற்போக்கான கருத்துகளை சாடும்போதும்கூட இதேரீதியான குற்றச்சாட்டை ஒருவர் கூறிவிட முடியும். மக்கள் பின்பற்றிவரும் பல சடங்குகளை, திருவிழாக்களை இன்று நீதிமன்றமேகூட தலையிட்டு தடுக்க நேரிடுகிறது. உதாரணமாக, மனிதர்களின் தலையிலே தேங்காய்களை உடைத்து வழிபடுகிற வழக்கம், குழந்தைகளை பூமிக்குள் புதைத்து திரும்ப எடுக்கிற வழக்கம், தமிழகத்தின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போன்ற வற்றை நீதிமன்றமே தலையிட்டு முறைப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உணர்வு புண்படும் என்கிற வாதம் இங்கேயும்கூட எழுப்பப்படலாம். இந்த நாட்டில் உடன்கட்டை ஏறும் வழக்கம் தடைசெய்யப்பட்டபோதுகூட இதேவித வாதத்தைத்தான் அன்று எழுப்பினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


பெண்களுடைய சுதந்திரம் தொடர்பான பல கருத்துக்களும் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள கருத்துகளுக்கு எதிராகவே இருக்குமென்பது யாவரும் அறிந்ததுதான். எனவே, அப்படியான பெண் உரிமை கருத்துக்களை சொல்பவர்களெல்லாம் இதேவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி, பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை முன்வைப்பவர்கள்மீதும் இப்படியான குற்றச் சாட்டுகளை எளிதாக சுமத்திவிட முடியும். எனவே, இந்தரீதியில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தை மிகவும் பிற்போக்கான நிலையில் வைத் திருப்பதற்குத்தான் உதவும்.
வலைப்பதிவுகள் தொடர்பான உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தவேண்டியது தனிமனித சுதந்திரத்தின்பால் அக்கறைகொண்டுள்ள அனைவருடைய கடமையாகும். வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், அப்படியான முயற்சி தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக முடிந்துவிடக் கூடாது. பயங்கரவாதமும், அடிப்படை வாதமும் நம்முடைய நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற இந்தச் சூழலில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது அத்தகைய சக்திகளுக்குத்தான் ஊக்கமளிப்பதாக இருக்-கும். கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்ற களமிறங்க வேண்டியது அரசியல் கட்சிகளின் உடனடி கடமை யாகும். பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் இதைப்பற்றி என்னநிலை எடுக்கப்போகின்றன என்பதை இந்தியாவின் இளைய சமுதாயம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

மூலம் - ஜுனியர் விகடன் (Issue Date: 04-03-09)

அடுத்து நம்ம (பதிவர்கள்) போராட்டம் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்...நீங்க என்ன சொல்றீங்க... ??????

Saturday, February 21, 2009

வெள்ளை மாளிகை முன் நடந்த தமிழர்களின் பேரணி - கண்ணொளி

கடும் குளிரையும் பொருட்படுத்தாது வெள்ளை மாளிகை முன்னே சிங்கமென கூடிய தமிழ் கூட்டம் காண்...

சுதந்திர தமிழீழமே தீர்வு என விண்முட்ட முழங்கிய முழக்கம் கேள்...


எம் உறவுகளின் உயிர்காக்க போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று கதறிய கோரிக்கை பார்...

சரித்திர நாயகன் ஒபாமா எம் சரித்திரத்தையும் நிலைநாட்ட உதவுங்கள் என்று வேண்டிய வார்த்தைகள் கேள்...

"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...."




Saturday, February 07, 2009

ஈழ மக்கள் துயர்துடைக்க கோரி உயிர்நீத்த சீர்காழி ரவிச்சந்திரன் வீடியோ...

தொப்புள் கொடி உறவுகளை காக்க கோரிஇன்று (7-02-09) தஞ்சை மாவட்டம் சீர்காழியில் தீக்குளித்து உயிர்தியாகம் செய்த ரவிச்சந்திரனின் மரணம் குறித்த வீடியோ பதிவுகள்

உணர்வுள்ள தமிழனின் உயிர் தியாகத்தை காணுங்கள்...

சாகும் தருவாயிலும் தன்னை காப்பாததே.. ஈழத்தமிழனை காப்பாத்து என்று கூறும் உணர்வாளனை காணுங்கள்...

இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் வேண்டும் மத்திய,மாநில அரசுகளுக்கு...?