Saturday, February 28, 2009

வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு? -- ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்

தொழில்நுட்ப முன்னேற்றம் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவடையச் செய்வதை நாமெல்லாம் அறிவோம். இணைய வசதி வந்தபிறகு தனிமனித சுதந்திரத்தின் எல்லை, தேச எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்துவிட்டது. இணைய வசதி ஏராளமான தகவல்களை விரல்சொடுக்கும் நேரத்தில் நமக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமல்ல, நம்முடைய எண்ணங்களை அதே வேகத்தில் உலகெங்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் உதவியாக இருக்கிறது.


ஊடக நிறுவனங்கள் ஏராளமாக பெருகிவந்தாலும், தனி மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அவற்றில் போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. நாளேடுகளை எடுத்துக்கொண்டால் வாசகர் கடிதம் என்ற வாய்ப்பின் மூலம் மட்டும்தான் ஒரு தனிமனிதர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியும். தொலைக்காட்சி ஊடகங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் விரும்பிய பாட்டைக் கேட்ப தற்கு டயல் செய்து பேசலாமேயழிய தங்களுடைய கருத் துக்களை தனிநபர் ஒருவர் வெளிப்படுத்த முடியாது. இந்த நிலையில்தான் இளம் தலைமுறைக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இணையம்.


இணைய வசதியைப் பயன்படுத்தி ஏராளமான வர்கள் தமக்கான தனிப் பட்ட வலைப்பதிவுகளை இன்று உருவாக்கியிருக்கி றார்கள். இதுவரையி லான ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத கருத்துக்கள், எழுத முடியாத விஷயங்கள், விவாதிக்க முடியாத பிரச் னைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்கும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலைப்பதிவுகள் வசதி ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அந்த வகையில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள தனிமனித உரிமைகளின் விளக்கத்தை இந்த வசதி விரிவுபடுத்தியிருக்கிறது, வலுப்படுத்தியிருக்கிறது. இந்த வலைப்பதிவுகள் இன்று அரசியல் பிரச்னை களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் மங்களூரில் ஒரு 'பப்'பில் புகுந்து ஸ்ரீராம் சேனா தொண்டர்களால் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவருக்கு 'பிங்க்' நிற ஜட்டிகளை அனுப்பி வைக்கவேண்டும் என்ற போராட்டம் வலைப்பதிவின் மூலம்தான் நடத்தப்பட்டது. அது பெரிய அரசியல் சர்ச்சையை உண்டுபண்ணியது. இப்படி பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் இன்று வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன. ஈழத்தமிழர்கள்மீது ஏவப்பட்டுள்ள இனப்படுகொலையை எதிர்த்தும், அங்கு நடத்துகொண்டிருக்கும் போரை நிறுத்த வலியுறுத்தியும்கூட ஏராளமான வலைப்பதிவுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு இன்று மற்ற ஊடகங்களைவிட இணையமே மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இத்தகைய வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கேரளாவைச் சேர்ந்த அஜித் என்ற பத்தொன்பது வயது இளைஞர் ஆர்குட் இணையதளத்தில் சிவசேனாவுக்கு எதிரான குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்த குழுவில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு ஒரு பதிவை அவர் துவக்கியிருக்கின்றார். 2008-ம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த விவாதப் பதிவில் ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இதைப் பார்த்து கோபமடைந்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அஜித் மீது மகாராஷ்டிரா மாநிலம் தானே காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில், அஜித் மீது செக்ஷன் 506, 295-ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடனே, அஜித் கேரள உயர் நீதிமன்றத் தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். அதோடு நில்லாமல், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு ஆணையிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அஜித் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அஜித் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கும் மாணவர். இணைய வசதிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாக அவருக்கு தெரிந்திருக்கும். ஆகவே, இப்படியான வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளைப் பற்றி எவரேனும் புகார் செய்தால், அத்தகைய புகார்களை அவர் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, முறையாக நீதிமன்றத்துக்குச் சென்று தன்னு டைய பதிலை அஜித் தெரிவிக்கட்டும் என்று கூறிவிட்டது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இப்போது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இணைய தளம் என்பது ஒரு பொது அமைப்புதான் என்றாலும், அதை நாடிச்சென்று பயன்படுத்து கிறவர்கள் மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளை அறிந்துகொள்ள முடியும். வலைப்பதிவுகளை எடுத்துக்கொண்டால், அதுவும்கூட எல்லோரும் பார்க்கக்கூடியனவாக இருக்கவில்லை. சில வலைப்பதிவுகளுக்குச் சென்று பார்க்கவேண்டுமென்றால், முதலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. வலைப்பதிவுகளில் ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, பல்வேறு நபர்களும் அதில் கலந்துகொண்டு விவாதங் களை நடத்துகிற வாய்ப்பு இருப்பதால் அந்த வலைப்பதிவின் உள்ளடக்கமானது ஒரு நபருக்கு சொந்தமாக இருப்பதில்லை. ஒரு விவாதத்தில் பங்கேற்கிற எல்லோருடைய கருத்துகளுக்கும் அந்த வலைப்பதிவை நடத்துகிறவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்குமா? இந்தக் கேள்வியைத்தான் இன்று இணைய ரசிகர்கள் எழுப்புகின்றனர்.


பத்திரிகைகளில்கூட பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்ப தற்கு ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலே வாய்ப்பளிக்கப்படுகிறது. அவற்றை அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தேர்ந்தெடுத்து போடுகிறார். ஆனாலும், அந்தக் கருத்துகளை பத்திரிகையினுடைய தலையங்கத்துக்கு இணையாக கருத முடியாது. அதைப்போலத்தான் ஒரு வலைப்பதிவை நடத்துகிறவரின் கருத்தையும், அதில் பங்கேற்கிறவர்களின் கருத்துகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. இத்தகைய வலைப்பதிவுகளில், 'இதில் பங்கேற்கிறவர்களுடைய கருத்துக் கள் அவர்களுடைய சொந்தக் கருத்து கள்தானே தவிர, வலைப்பதிவை நடத்து கிறவரின் கருத்து அல்ல' என்று அதிலே அறிவிக்கப்பட்டிருக்கும். இதையும் மீறி அந்தக் கருத்துகளுக்கெல்லாம் விவா தத்தை துவக்கியவர்தான் பொறுப்பு என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? அதேசமயம், வலைப்பதிவு தவிர்த்து பெரிய நிறுவனங்கள் நடத்தி வரும் இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளை 'நெறியாளுனர்' ஒருவர் தீவிரமாகக் கண்காணித்து ஆபாச கருத்துக்களோ, வன்முறை மற்றும் வேறு துவேஷ உணர்வுகளைக் கொண்ட கருத்தோ இடம்பெறும்போது உடனடியாக நீக்குவதும் நடக்கத்தான் செய்கிறது.


பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத் தப்பட்டுவிட்டதாக சொல்லித்தான் சிவசேனா கட்சியினர் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்கள். இதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமேயானால், இதே வாதத்தை முன்வைத்து எவர் மீது வேண்டுமானாலும், எவரும் வழக்கு தொடுத்துவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். சமூகத்தின் பிற்போக்கான கருத்துகளை சாடும்போதும்கூட இதேரீதியான குற்றச்சாட்டை ஒருவர் கூறிவிட முடியும். மக்கள் பின்பற்றிவரும் பல சடங்குகளை, திருவிழாக்களை இன்று நீதிமன்றமேகூட தலையிட்டு தடுக்க நேரிடுகிறது. உதாரணமாக, மனிதர்களின் தலையிலே தேங்காய்களை உடைத்து வழிபடுகிற வழக்கம், குழந்தைகளை பூமிக்குள் புதைத்து திரும்ப எடுக்கிற வழக்கம், தமிழகத்தின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போன்ற வற்றை நீதிமன்றமே தலையிட்டு முறைப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உணர்வு புண்படும் என்கிற வாதம் இங்கேயும்கூட எழுப்பப்படலாம். இந்த நாட்டில் உடன்கட்டை ஏறும் வழக்கம் தடைசெய்யப்பட்டபோதுகூட இதேவித வாதத்தைத்தான் அன்று எழுப்பினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


பெண்களுடைய சுதந்திரம் தொடர்பான பல கருத்துக்களும் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள கருத்துகளுக்கு எதிராகவே இருக்குமென்பது யாவரும் அறிந்ததுதான். எனவே, அப்படியான பெண் உரிமை கருத்துக்களை சொல்பவர்களெல்லாம் இதேவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி, பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை முன்வைப்பவர்கள்மீதும் இப்படியான குற்றச் சாட்டுகளை எளிதாக சுமத்திவிட முடியும். எனவே, இந்தரீதியில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தை மிகவும் பிற்போக்கான நிலையில் வைத் திருப்பதற்குத்தான் உதவும்.
வலைப்பதிவுகள் தொடர்பான உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தவேண்டியது தனிமனித சுதந்திரத்தின்பால் அக்கறைகொண்டுள்ள அனைவருடைய கடமையாகும். வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், அப்படியான முயற்சி தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக முடிந்துவிடக் கூடாது. பயங்கரவாதமும், அடிப்படை வாதமும் நம்முடைய நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற இந்தச் சூழலில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது அத்தகைய சக்திகளுக்குத்தான் ஊக்கமளிப்பதாக இருக்-கும். கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்ற களமிறங்க வேண்டியது அரசியல் கட்சிகளின் உடனடி கடமை யாகும். பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் இதைப்பற்றி என்னநிலை எடுக்கப்போகின்றன என்பதை இந்தியாவின் இளைய சமுதாயம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

மூலம் - ஜுனியர் விகடன் (Issue Date: 04-03-09)

அடுத்து நம்ம (பதிவர்கள்) போராட்டம் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்...நீங்க என்ன சொல்றீங்க... ??????

3 comments:

நாமக்கல் சிபி said...

//அடுத்து நம்ம (பதிவர்கள்) போராட்டம் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்...நீங்க என்ன சொல்றீங்க... ??????//

வழிமொழிகிறேன்!

அபி அப்பா said...

சிபியார் தீக்குளிப்பு போடாட்டம் நடத்தி எங்களுக்கு வழி காட்ட வேண்டும்!:-))

குப்பன்.யாஹூ said...

Be careful bloggers, This Vikatan, Kumudam, Nakkeran are trying to market/ capitalise Blogs for their own business & profit.

Vikatan, Dinamalar are ensuring an article about blog every week so that youth will buy and read it.